பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்கு சண்டீகரில் வைத்து இன்று இரண்டாவது திருமணம் நடைபெறகிறது.
பஞ்சாப் மாநில முதலமைச்சராக உள்ள பகவந்த் மான் இரண்டாவது முறையாக திருமணம் செய்ய உள்ளார் என்று தகவல் பரவி வந்தது. இந்நிலையில், பகவந்த் மான், டாக்டர் குர்ப்ரீத் கவுரை இன்று திருமணம் செய்து கொள்ளவுள்ளார். சண்டிகரில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், இதற்கு குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் இதற்கு முன்பு இந்தர்ப்ரீத் கவுர் என்பவரை மணந்தார். தனது முதல் மனைவியை 6 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்துவிட்டார். அவர் இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அதேநேரத்தில், அவரின் இரண்டு குழந்தைகளும் பகவந்த் மான் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த திருமண விழாவில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் கலந்து கொள்ளவதாக தகவல் வெளியாகியுள்ளது. பகவந்த்மான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ள குர்ப்ரீத் கவுரை பகவந்த்மானின் தாயார் மருமகளாக தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்தினர் தீவிரமாக பெண்தேடி வந்த நிலையில், இன்று திருமணம் நடைபெறுகிறது.
நகைச்சுவை நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பகவந்த் மான் 2014 இல் முதன்முறையாக சங்ரூரில் இருந்து எம்.பி.யானார். இந்த ஆண்டு மார்ச் மாதம் பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு முன், ஆம் ஆத்மி கட்சி பகவந்த் மானை பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து தேர்தலில் களமிறக்கியது. அதில், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற பிறகு பஞ்சாப் மாநிலத்தின் 17வது முதலமைச்சராக பகவந்த் மான் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்








