மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழிப்பறி மற்றும் தாக்குதல் தொடர்பாக மூன்று பிரிவுகளில் வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன், அருண், குமார், மாதவன் ,கார்த்தி, முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்று அதிகாலை காரைக்கால் தென்கிழக்கே 44 நாட்டிகல் தொலைவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகள், ஜிபிஎஸ் கருவி, இன்ஜின் ஆகியவற்றை பறித்துக் கொண்டதுடன், இரும்பு ரோப்பால் கொடூரமாக
தாக்கியுள்ளனர். இதில் ஐந்து மீனவர்கள் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து உடலில்
ரத்த கட்டுக்கள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று கரை திரும்பிய 5 மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு, பின்னர் பொறையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். படுகாயம் அடைந்த வேல்முருகன், பாலசுப்ரமணியன், கார்த்தி, அருண்குமார், மாதவன் ஆகிய ஐந்து பேர்
மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு மேல்
சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்ய கடலோர காவல் குழுமத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே தரங்கம்பாடி மீனவர்கள் மீது நேற்று தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழிப்பறி மற்றும் தாக்குதல் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் 451, 395, 397 ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-ம.பவித்ரா