நீட் தேர்வின் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டதாக குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஒய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் 4 வது ஆலோசனைக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவத்துறைச் சிறப்பு செயலாளர் செந்தில்குமார், பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, சட்டத்துறைச் செயலாளர் கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குழுவின் வேண்டுகோளின்படி நீட் தேர்வால் பாதிக்கப்பட்டோர், பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே.ராஜன், நீட் தேர்வின் தாக்கங்கள் குறித்த ஆய்வு செய்யும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டதாகவும் மிக விரைவில் ஆய்வு பணிகள் முடிவடைய உள்ளதாகவும் தெரிவித்தார். நீட் தேர்வால், பணிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய ஏ.கே. ராஜன், குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் முடிவடையும் என்பதால் கால அவகாசத்தை நீட்டிக்கும்படி அரசிடம் கோரப்படவில்லை என்று தெரிவித்தார்.