அரசுப் பள்ளிகளில் புதிதாக 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து 10,
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பசுமைவழிச் சாலையில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், 350 மாணவர்களுக்கு
தலா ரூ.3,000 கல்வி ஊக்கத்தொகை மற்றும் அவர்களின் பெற்றோருக்கு
பரிசுகளையும் வழங்கினார்.
பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:
இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சர் என்றால் அது நம் முதலமைச்சர் ஸ்டாலின் தான். கல்விக்கு ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள், உயர்கல்வியைத் தொடருகிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டியது ஓர் அரசின் கடமை.
ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வந்த உடன், கல்விக்காக சில திட்டங்களை
கொண்டுவருவது வழக்கம் தான். ஆனால் கடந்த ஆட்சியாளர்கள்
ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.75,000 கடனை வைத்துவிட்டு சென்றபோதும்,
கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் பள்ளிக் கல்விக்காக ரூ.38,000 கோடியை
ஒதுக்கிய முதலமைச்சர் தான் மு.க.ஸ்டாலின்.
கல்வி வளர்ச்சிக்காக பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் உட்பட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
அரசுப் பள்ளிகள் மீது அதிக கவனம் செலுத்தி வருவதன் காரணமாக, நடப்பு
கல்வியாண்டில் 9 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்திருக்கின்றனர். இதற்குக் காரணம் அரசின் திட்டங்கள் தான்.
ஒப்பீடு செய்யாதீர்கள்
குழந்தைகளை யாருடனும் ஒப்பீடு செய்யக் கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கென்று தனித்திறமை உண்டு. அத்தனித்திறனை அடையாளம் கண்டு அதை பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.
எத்தனை மார்க் வாங்கினாலும், பிள்ளைகளை கொண்டாடிப் பழக வேண்டும். கல்வித் துறையின் பொற்காலமாக திமுக ஆட்சி இருந்து வருகிறது என்றார் அன்பில் மகேஸ்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் வேலு, கருணாநிதி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
-மணிகண்டன்