அசாமில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் சத் பூஜை (Chhath Puja) வட இந்தியாவில் நேற்று கொண்டாடப்பட்டது. அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், இந்த விழாவுக்கு சென்றுவிட்டு ஆட்டோ ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்தனர். குழந்தைகள் பெண்கள் உட்பட 10 பேர் அதில் இருந்தனர்.
ஆட்டோ, கரிம்கஞ்ச்- திரிபுரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பதர்கண்டி என்ற கிராமத்தின் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது சிமென்ட் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த 9 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். அவர்கள் உடல்கள் சாலையில் சிதறின.
இதையடுத்து லாரி டிரைவர் அங்கி தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் பற்றிய விவரம் உடனடியாகத் தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








