“திரிபுராவில் 828 மாணவர்களுக்கு HIV பாதிப்பு உண்மைதான்!” ஆனால் நடந்தது இதுதான் என திரிபுரா அரசு விளக்கம்!

திரிபுராவில் 828 மாணவர்கள் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மிக கொடிய நோய்களில் எய்ட்ஸும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் சுமார்…

திரிபுராவில் 828 மாணவர்கள் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் மிக கொடிய நோய்களில் எய்ட்ஸும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் சுமார் 25 லட்சம் பேர் எய்ட்ஸ் தொற்றுடன் வாழ்கின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் இந்த தொற்றின் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவிலும் இதன் பாதிப்பு வேகம் எடுத்துள்ளது.

அந்தவகையில், திரிபுராவில் கடந்த 2007 முதல் 2024 வரையிலான 17 வருட புள்ளி விவரங்களின்படி, சுமார் 828 மாணவர்கள் எச்ஐவி தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதை திரிபுரா அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. முதலில் எந்த கால கட்டத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. இவ்விவகாரம் தொடர் சர்ச்சைக்குள்ளான நிலையில், கடந்த 17 வருடங்களுக்கான புள்ளி விவரம் என்பதை அம்மாநில அரசு உறுதி செய்தது. மேலும் திரிபுராவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை பொருள் பயன்பாடு அதிகமாக இருப்பதே காரணம் எனவும் திரிபுரா அரசு கூறியுள்ளது.

இது குறித்து அடிக்கடி புகார்கள் எழுந்த நிலையில், சமீபத்தில் திரிபுரா எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டது. இந்த கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களிடையே பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் 828 மாணவர்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளதும், அவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளதும் தெரியவந்தது. இதுமட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களுக்கு திரிபுராவில் இருந்து மாணவர்கள் படிக்கச் சென்றிருக்கிறார்கள்.  அவர்களை மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்ப அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் ஊசி மூலம் போதைப் பொருள் செலுத்திக்கொள்ளும் பழக்கம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.