தமிழ்நாட்டில், 80 சதவீத தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்படும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹரியானா மாநிலத்தில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75 சதவீதத்தை உள்ளூர் மக்களுக்கே வழங்குவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்பட்டதாகவும், இந்த சட்டத்திற்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு மூலம், அனைத்து மாநிலங்களிலும் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் ஹரியானா மட்டுமல்லாமல், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், தமிழ்நாட்டில் அமைக்கப்படும் தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புகள் வட இந்திய இளைஞர்களுக்கு தாரை வார்க்கப்படுவதாகவும், இந்த நிலையை மாற்றி, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், ‘தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீத வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும்’ என்று திமுக வாக்குறுதி அளித்ததாகவும், அதை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் இன்றைய தமிழ்நாடு அரசுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் மாதம் 40 ஆயிரம் வரை ஊதியம் கொண்ட பணிகளில் 80 சதவீதத்தை தமிழக இளைஞர்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.