சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டிஸ்

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட்ட தமிழக அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீது பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த என்.கார்த்திகேயன்…

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட்ட தமிழக அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீது பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த என்.கார்த்திகேயன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடங்களை வழங்க 2020 நவம்பர் மாதம் தமிழக அரசு முடிவெடுத்தது, இந்த முடிவு பாகுபாட்டை ஏற்படுத்தியுள்ளது என்றும் அரசியலமைப்பு சட்டம் 14-க்கு எதிராக உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பல்வேறு மாநிலங்களில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் அந்தந்த மாநில அரசுகளின் முடிவு செல்லதக்கவையா? என நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை, அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும், 2020 நவம்பர் 7-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பதால் சூப்பர் ஸ்பேஷலிட்டி 50% ஒதுக்கீட்டினை அரசியலைப்பு சட்டத்திற்கு எதிரானது என கூறி தமிழக அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த முறை இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 2020-ஆம் ஆண்டு மட்டும் சூப்பர் ஸ்பேஷலிட்டி படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டு இருந்தது. மேலும், சூப்பர் ஸ்பேஷலிட்டி படிப்புகளில் இட ஒதுக்கீடு கூடாது, மெரிட் அடிப்படையில் சேர்க்கை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் பல முறை தெரிவித்துள்ளது. எனவே, 2021 நீட் சூப்பர் ஸ்பெஹாலிட்டி மாணவர் சேர்க்கையை அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாமல் நடத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி எல். நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள் இவ்வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டிஸ் பிறப்பித்து வழக்கை பிப்ரவரி 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.