மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சீனா பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த மாதம், ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10-ஆம் தேதி வரையில் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு தனிக் குழு அமைத்து தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த போட்டியில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு ஒலிம்பிக் பாரம்பரியம் போன்று தொடர் ஜோதி ஓட்டம் நடத்தப்படும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
அதன்படி, செஸ் ஒலிம்பியாட்டின் முதல் ஜோதி ஓட்டம் டெல்லியில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. இந்திராகாந்தி மைதானத்தில் இந்த ஜோதி ஓட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம், 40 நாட்கள் இந்தியாவில் உள்ள 75 நகரங்களில் வலம் வருகிறது. ஜூலை 27-ஆம் தேதி ஒலிம்பியாட் ஜோதி, மாமல்லபுரத்தை வந்தடையும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சீனா பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரஷ்ய மற்றும் பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்குத் தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில், தற்போது சீனா தானாகவே பங்கேற்க முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








