“திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக ஆட்சி கால கட்டங்களில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னை அடுத்த நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில் ரூ.342 கோடி மதிப்பீட்டில் புதிதாக மாமல்லன் நீர்த்தேக்கம் அமைகிறது. சென்னையின் 6-வது நீர்த்தேக்கமான மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

“காற்றும் நீரும் இந்த பூமியில் இருப்பதால் தான் உயிரினங்கள் உருவாகி  வாழ்கிறோம். நீரின்றி அமையாது உலகு என உலகப் பொதுமறையில் எடுத்துக்கூறினார் வள்ளுவர். இயற்கையோடு இணைந்ததுதான் தமிழர் வாழ்வு. அதை ஒட்டியே திராவிட மாடல் அரசு நடைபெறுகிறது.

1967 – 2011 திமுக ஆட்சி கால கட்டங்களில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. 43 நீர்த்தேக்கங்களை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மேட்டூர் அணை முழுவதும் நிரம்பி குறித்த நேரத்தில் திறந்து வைத்திருக்கிறோம். ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் தற்போது புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. புதிய நீர்த்தேக்கம் மூலம் நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்க முடியும்.

இந்த நீர்த்தேக்கம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு பயன்படும். 34 கி.மீ. நீள கரையுடன் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. பெருமை உணர்வோடு சொல்கிறேன்… இந்த மாமல்லன் நீர்த்தேக்கம், மக்களுக்கு காலந்தோறும் வாழ்வளிக்க போகிறது. ஏற்கனவே சென்னையைச் சுற்றி செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரிகள் உள்ளன. நிதி மேலாண்மை போல் நீர் மேலாண்மையும் மிக மிக முக்கியம். சென்னைக்காக திமுக அரசு எத்தனையோ திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறது. சென்னையின் முகமே மாறக்கூடிய வகையில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.