விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சேலத்தில் இருந்து
செங்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்ட , 400 கிலோ குட்கா
பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக செங்கோட்டையைச் சேர்ந்த பாஜக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசபெருமாள் உத்தரவின்பேரில், மாவட்ட எல்லை மற்றும் நகர் பகுதிகளில் சிறப்பு பிரிவு போலீசார் தீவிர
ரோந்து மற்றும் சோதனை படிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,
நேற்று காலை மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அழகாபுரி சோதனை
சாவடியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மினி லோடுவேன்
ஒன்றை மறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், வேறு மாவட்ட பதிவு எண் கொண்ட மினி லோடு ஆட்டோவாக இருப்பதால்,
ஓட்டுநர் கண்ணனிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது
கண்ணன் கூறும்போது, சேலத்தில் இருந்து லோடு ஏற்றுவதற்காக சென்று
கொண்டிருப்பதாக தெரிவித்தார். வெறும் மினி லோடு வண்டியை சேலத்தில்
இருந்து விருதுநகர் மாவட்டம் வரை, எதற்காக இயக்கி வர வேண்டும் என்று
சந்தேகித்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே, ஓட்டுநர் கண்ணனின்
செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த செல்போனை வாங்கி ஆன்
செய்த போது, எதிர் முனையில் இருந்து “ஒருவர் ஏப்பா லோடு ஏற்றி வந்து
விட்டாயா, சரக்கை எப்போது கொண்டு வந்து சேர்ப்பாய்” என்று கேட்டுள்ளார்.
இதனால், சுதாரித்த காவல்துறையினர் மீண்டும் வாகனத்தை தீவிரமாக
சோதனை செய்தனர்.
அப்போது “புஷ்பா திரைப்படம்” பாணியில் மினி லோடு வேன் சரக்கு ஏற்றக்கூடிய
பகுதிக்கு கீழ், 400 கிலோ குட்கா பொருட்கள் மூட்டையாக கட்டப்பட்டு பதுக்கி
வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, கண்ணனை கைது செய்த
நத்தம்பட்டி காவல் நிலைய போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கடந்த 30 நாட்களில் விருதுநகர் மாவட்டத்தில், சுமார் 1000 கிலோ தடை
செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கதாகும். இதனிடையே, குட்கா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக செங்கோட்டை பாஜக கவுன்சிலர் செண்பகராஜ் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கு. பாலமுருகன்