அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து பரிசீலித்து, இந்த உயர்வினை நடப்பாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என்றும், இதனால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : கர்நாடக முதல்வரை தேர்வு செய்வதில் தாமதம் ஏன்? நியூஸ் 7 தமிழுக்கு எம்பி செல்லக்குமார் பிரத்யேக பேட்டி
இந்த அகவிலைப்படி உயர்வால் ஆண்டு ஒன்றிற்கு தமிழ்நாடு அரசுக்கு சுமார் ரூ.2,366 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ள அரசு, எதிர்வரும் காலங்களிலும் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வைச் செயல்படுத்திடும் என்று தெரிவித்துள்ளது.







