கன்னியாகுமரியில் தவறவிடப்பட்ட ரூ.55.27 லட்சம் மதிப்பிலான 335 செல்போன்கள் மீட்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 55, 27,000 ரூபாய் மதிப்புள்ள, 335 செல்போன்களை தவறவிட்ட பொதுமக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டார். உத்தரவின்படி சைபர் பிரிவு போலீசார் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

தொடர் நடவடிக்கையால் தற்போது சுமார் 55,27,000 (ஐம்பத்தி ஐந்து இலட்சத்து இருபத்தி ஏழாயிரம் ரூபாய்) மதிப்புள்ள 335 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உரிய நபர்களிடம் இன்று ஒப்படைத்தார்.

இந்த செல்போன்களை கண்டுபிடிக்க காரணமான சைபர் பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார். மேலும் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் இதுவரையிலும் சுமார் 1,04,07,000/- (ஒரு கோடியே நான்கு இலட்சத்து ஏழாயிரம் ரூபாய்) மதிப்புள்ள 640 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.