கேரளாவில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு கடந்த 20 நாட்களில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 15 ஆயிரத்து 493 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 03 பேர் உயிரிழந்துள்ளதாவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒருவாரம் தாமதமாக கடந்த 8-ந்தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியதுமே மாநிலம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநில சுகாதாரதுறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவலும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் மாநிலம் முழுவதும் நேற்றுவரை 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகினறனர். காய்ச்சல் பாதிக்கப்பட்டோரில் பலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 15 ஆயிரத்து 493 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 200 பேர் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திருவனந்தபுரத்தில் காய்ச்சல் பாதித்த ஒருவரும், பாலக்காட்டில் டெங்குவால் பாதித்த ஒருவரும், கொல்லத்தில் எலி காய்ச்சலில் ஒருவரும் பலியானத்தை சுகாதார துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும் H1N1 வைரஸால் எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா