அங்கன்வாடி மையத்தில் குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செல்வழிமங்கலம் அங்கன்வாடி மையத்தில் குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த மூன்று குழந்தைகள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் செல்வழிமங்கலம் பகுதியில்
இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் சுமார் 13 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கன்வாடி மையத்திற்கு வந்த ஜம்போடை தெருவைச் சேர்ந்த
வம்சிகா (2), யோகேஷ் (3), பிரியதர்ஷினி (2) ஆகிய மூவரும் அங்கன்வாடி மையத்தில்
குளிர்பான கேனில் இருந்த மண்ணெண்ணெயை குளிர்பானம் என நினைத்து குடித்துள்ளனர்.
இதில் மூன்று குழந்தைகளுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து
குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மூன்று
குழந்தைகளும் உடனடியாக சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் குழந்தைகளை முறையாக பராமரிக்காத செல்வழிமங்கலம் அங்கன்வாடி மைய ஊழியர் சோபா மற்றும் உதவியாளர் சாந்தி ஆகிய இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் குழந்தைகள் வளர்ச்சித் துறை அதிகாரி பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் 3 குழந்தைகளில் யோகேஷுக்கு மட்டும் தொண்டை பகுதியில் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக, 3 குழந்தைகளின் பாட்டி சரஸ்வதி நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், பணியாளர் ஷோபா பெரும்பாலும் செல்போன் பேசிக் கொண்டும், பார்த்து கொண்டும் தான் இருப்பார். 13 குழந்தைகளைக் கூட கவனிக்காமல் அலட்சியமாக இருந்ததே குழந்தைகள் மருத்துவமனை செல்ல காரணம். மண்ணெண்ணெய் என்பதால் லேசான பாதிப்பு. இதுவே ஆசிட்டாக இருந்தால் குழந்தையின் நிலைமை என்னவாகி இருக்கும். அதை நினைக்கையில் பயமாக இருக்கிறது என ஆதங்கத்தை தெரிவித்தார்.
-ம.பவித்ரா