பாமக போராட்டத்தில் தாக்குதல் நடத்திய 2 சிறுவர்கள் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், போலீசார் மீது கல்வீசிய 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் டி.ஜி.பி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பாமகவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், மக்களை அச்சுறுத்தி நிலங்களை எடுக்கும் என்எல்சிக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
இதனை தொடர்ந்து, அன்புமணி தலைமையில் பாமகவினர் ஏராளமானோர் என்எல்சி நிறுவனத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அன்புமணி உள்ளிட்டோரை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் காவல் துறை வாகனத்தில் இருந்தபடியே செய்தியாளர்கள்களுக்கு அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
என்.எல்.சி. விவகாரம் அனைவருக்குமான பிரச்னை. மண்ணையும் மக்களையும் அழித்து மின்சாரம் எடுக்க தேவையில்லை. கடலூர் மாவட்டத்தை என்எல்சி நிர்வாகம் அழித்துவிட்டது. தற்போது தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது. அதனால் தமிழ்நாட்டிற்கு என்எல்சி தேவையில்லை. மின்சாரம் தயாரிக்க மாற்று வழியை யோசிக்க வேண்டும். விளைநிலங்களை என்எல்சிக்காக கையகப்படுத்தக் கூடாது. விளைநிலத்தை கையகப்படுத்தமாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் .
மேலும் என்எல்சி விவகாரத்தில் பாமக தொடர்ந்து போராடும். என்எல்சி நிறுவனத்திற்கு உடந்தையாக காவல்துறை உள்ளது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
அன்புமணி கைது செய்யப்பட்ட போது போலீஸ் வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன. கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இருப்பினும், போராட்டக்காரர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது.
இதனால் அப்பகுதி சிறிது நேரம் போர்க்களமாக காட்சியளித்தது. இதனிடையே, கலவரம் நடைபெற்ற இடத்தை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் பார்வையிட்டார்.
இதனிடையே, கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை 6 மணிக்கு பிறகு அரசு பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த போக்குவரத்துக் கழகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததால், மாவட்டம் முழுவதும் மக்கள் வீடுதிரும்ப முடியாமல் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர்.
இந்நிலையில், நேற்று மாலை 6 மணி அளவில் என்எல்சி முற்றுகை போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக நிர்வாகிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அனைவரும் தங்களது சொந்த வாகனத்தில் புறப்பட்டுச்சென்றனர்.
இந்த சூழலில், நெய்வேலிக்கு விரைந்த டிஜிபி சங்கர் ஜிவால் என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 20 போலீசாரை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து அவர், அங்குள்ள சூழல் குறித்து ஐஜி கண்ணனிடம், கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி கண்ணன், போராட்டங்களை அறவழியில் நடத்தலாம் எனவும், வன்முறையில் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இந்நிலையில், என்.எல்.சி நுழைவுவாயில் முன்பு போராட்டம் நடத்தி தாக்குதல் நடத்திய 28 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட 28 பேரில் 2 பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். அவர்கள் சிறுவர் சீர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீசார் மீது கல்வீசிய 5 பேர் கைது செய்யப்பட்டு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை என்.எல்.சி.விரிவாக்கத்தை கண்டித்து போராட்டம், சாலைமறியல், கல்வீச்சு சம்பவம், பேருந்து மீது தாக்குதல் நடத்தியதாக 15 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் டி.ஜி.பி சங்கர் ஜிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







