லக்னோவில் தாயின் சடலத்துடன் 10 நாட்கள் மகள் தங்கியிருந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுனிதா தீட்சித். இவர் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது கணவர் ரஜ்னீஷ் தீட்சித்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்து மகள் அங்கிதா தீட்சித் உடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இருவரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். காவல் துறையினர் வந்து வீட்டின் கதவை தட்டியபோது, உள்ளிருந்து மகள் அங்கிதாவின் குரல் மட்டும் கேட்டுள்ளது. ஆனால், அவர் கதவைத் திறக்கவில்லை.
இதையடுத்து, போலீஸார் தச்சரை வரவழைத்து கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்றனர். அப்போது, படுக்கை அறையில் தாய் சுனிதாவின் உடல் சிதைந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மற்றொரு அறையில் இருந்த மகளிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் தெளிவற்ற பதில்களைக் கூறியுள்ளார். அவர் சரியான மனநிலையில் இல்லை என காவல் துறையினர் தெரிவித்தனர்.
சுனிதா உயிரிழந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்றும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சுனிதா கடந்த சில வருடங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து மகள் அங்கிதாவிடம் விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். தாயின் சடலத்துடன் மகள் 10 நாட்கள் தங்கியிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








