மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை பாலம் அருகே தனியார் அசைவ உணவகம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 12 பேரும், கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் 10 பேரும் கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்டு உள்ளனர். இதனையடுத்து நேற்று இரவிலிருந்து கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆறுபேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த போலீசார், பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







