தமிழ்நாட்டில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், காரீப் பருவம் 2002–2003 முதல் மத்திய அரசின் முகவராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்பட்டு மத்திய அரசின் தர நிர்ணயத்திற்குட்பட்டு நெல் கொள்முதல் செய்து வருகிறது.
கடந்த 2021-2022 காரீப் கொள்முதல் பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆண்டும் காரீப் கொள்முதல் 2022-2023 பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள் முதல் செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த ஆண்டு வழக்கத்திற்கும் முன்பாகவே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையிலும், விவசாயிகளுக்குத் தேவையான அளவு விதைகள் மற்றும் உரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையிலும், விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் காரீப் 2022-2023 பருவத்திற்கான நெல் கொள் முதலை 1.09.2022 முதற்கொண்டு மேற்கொள்ள பிரதமரைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க மத்திய அரசு தமிழ்நாட்டில் காரீப் 2022-2023 பருவத்திற்கான நெல் கொள் முதலை 1.09.2022 முதற்கொண்டு மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு காரீப் 2022-2023 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2040/-என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2060/- என்றும் நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் துயர்துடைத்து அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கோடும், தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டிலும் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்க ஆணை பிறப்பித்து அதன்படியே, தற்போது சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,115/- என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,160/- என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
மேலும், இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகையினை 1.09.2022 முதல் வழங்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.