நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடிக்கு மேல் மோசடி செய்து மதுரையில் தங்கும்
விடுதியில் பதுங்கியிருந்த உரிமையாளர்கள் இருவரை பொருளாதார குற்றப்பிரிவு
காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில்( New Raise Alayam Small Financial Banking
Pvt. Ltd) என்ற நிதி நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டு முதலீட்டுக்கு அதிக வட்டி
தருவதாக விளம்பரப்படுத்தியுள்ளனர்.
இதை நம்பிய பலரும் ரூ. 5 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில், முதலீடு முதிர்வடைந்தும் அதற்குரிய தொகையை முதலீட்டாளர்களுக்கு
நிதி நிறுவனத்தினர் தரவில்லை.
இதையடுத்து நிதி நிறுவனத்திடம் சென்று பொதுமக்கள் கேட்டதையடுத்து நிர்வாகிகள் தலைமறைவாகினர். இதுதொடர்பாக பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன உரிமையாளர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், நிதி நிறுவனத்தின் தலைவரான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த
பொன்னுசாமி மகன் ராஜா(41)மற்றும் இயக்குநரான காரைக்குடியைச் சேர்ந்த
அல்லிமுத்து மகன் பழனியப்பன்(43) ஆகிய இருவரும் மதுரையில் உள்ள தனியார்
விடுதியில் தங்கியிருப்பதாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல்
கிடைத்தது.
அதன்பேரில் துணை கண்காணிப்பாளர் பாண்டி செல்வம் தலைமையில் விடுதிக்குச் சென்ற போலீசார் அங்கு தங்கியிருந்த இருவரையும் கைது செய்தனர்.
மேலும் இருவரையும் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மதுரை மத்திய
சிறையில் அடைத்தனர்.








