புதுக்கோட்டை தேர் விபத்து தொடர்பாக 2 பேர் கைது

புதுக்கோட்டை திருக்கோகரணம் ஸ்ரீ பிரகதாம்பாள் தேர் விபத்து தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோகரணம் ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்னேஸ்வரர் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று…

புதுக்கோட்டை திருக்கோகரணம் ஸ்ரீ பிரகதாம்பாள் தேர் விபத்து தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோகரணம் ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்னேஸ்வரர் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை ஒரே நேரத்தில் வெகு வேகமாக இழுத்ததால் தேர் நிலை குலைந்து தேரின் பின் சக்கரத்தில் கிளாம்பு கழன்று முன்னோக்கி சாய்ந்தது. தேர் சாய்ந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை.

தேரின் வடத்தை வேகமாக இழுத்ததால் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளன. மேலும் தேர் விபத்து குறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோயில் ஊழியர்களான ராஜேந்திரன் மற்றும் வைரவன் ஆகியோர் மீது சக்கரத்தில் கட்டையை போட்டு தேரை நிறுத்த முயன்று விபத்தை ஏற்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.