தடுப்பூசி தொடர்பாக வெள்ளை அறிக்கை கோரிய பாஜக மாநில தலைவர் எல்.முருகனுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள், சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை, ரோட்டரி கிளப் நிர்வாகிகள், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழ்நாட்டில் நேற்றிரவு வரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 325 தடுப்பூசிகள் கையிருப்பில் இருந்ததாகத் தெரிவித்தார். இது இன்று மாலைக்குள் தீர்ந்துவிடும் என கூறிய அவர், மேலும் 2 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளதாகத் தெரிவித்தார்.
இது தான் தடுப்பூசி நிலவரம் பற்றிய வெள்ளை அறிக்கை என விளக்கம் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், வெள்ளை அறிக்கை கோரும் தலைவர், ஒன்றிய அரசிடம் பேசி கூடுதல் தடுப்பூசிகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.







