தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்பதால் பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறியதாவது:
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளேன். சென்னையில் சில பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சென்னையில் 24 மணி நேரத்தில் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. இது அதி கனமழையாகும். சென்னையில் 160 நிவாரண மையங்கள் தயாராக உள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப் பட்டுள்ளன. அதைத் தொடர உத்தரவிட்டுள்ளேன். தேசிய பேரிடர் மீட்பு படை, காவல்துறை, தீணையப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை நீர் தேங்கிய இடங்களில் ராட்சத பம்புகள் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. 1070 என்ற தொலைபேசியில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொள்ளலாம். தமிழ்நட்டின் நீர் நிலைகள் 24 மணி நேரமும் கண்காணிப்பட்டு வருகின்றன. தீபாவளிக்காக ஊருக்குச் சென்றவர்கள் சென்னைக்கு வருவதை இரண்டு மூன்று நாள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இன்று மாலை தென் சென்னையில் ஆய்வு செய்கிறேன்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே மழைநீர் வடிகாலை சுத்தப்படுத்தி உள்ளோம். கடந்த கால ஆட்சியில் 10 ஆண்டுகளாக ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் வந்ததில் இருந்து 50%. பணிகளை செய்திருப்பதில் திருப்தியாக இருக்கிறோம். மீதம் உள்ள 50% பணிகளை செய்ய இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.