1500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்; அமைச்சர் மா.சுப்ரமணியன்

நீர்த்தேக்க பகுதிகளுக்குச் சென்று மருத்துவ சேவை வழங்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 1500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை…

நீர்த்தேக்க பகுதிகளுக்குச் சென்று மருத்துவ சேவை வழங்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 1500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு சாலையில் உள்ள சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடமாடும் மருத்துவ முகாமினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது;

“சுகாதாரத்துறை சார்பில் ஆங்காங்கே உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் 4055 இடங்களில் பருவ மழைக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் 1,53,000-கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதில் நேற்று சென்னையில் ஒரேநாளில் 398 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் இன்று சென்னையில் 500  மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. மழைக் காலத்தில் ஏற்படுகிற காய்ச்சல் இருமல் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு நோய்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசு சார்பில் மழைக்கான சிறப்பு முகாம்கள் மூலம் மூன்று மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருபில் உள்ளது. சென்னையில் ஸ்டான்லி, கே.எம்.சி போன்ற மருத்துவமனைகளில் உள்ள 100 மருத்துவர்கள் மற்றும் 100 செவிலியர்கள் மூலம் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருத்துவ சேவை வழங்கி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் துணை சுகாதார நிலையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வட்டார மருத்துவமனைகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் மருத்துவர்கள்  செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் என 1.50 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

2000 மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் 4000 க்கும் மேற்பட்ட மருத்துவ களப்பணியாளர்கள் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சுகாதார துறை சார்ந்த பணிகளை செய்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 1500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இயங்கி வருகிறது.

இதில் சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பட்டு வருகிறது. நீர்த்தேக்கம் இருக்கும் பகுதிகளில் இந்த வாகனங்கள் சென்று மருத்துவ சேவைகளை வழங்கும். மாலை வரை காற்று மற்றும் மழை வேகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது பொதுமக்கள் மழைக்காக ஒதுங்கி மரத்தடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள் பள்ளிகள் போன்ற இடங்களில் சூழ்ந்துள்ள நீரினை 24 மணிநேரமும் வெளியேற்றிவருவதுடன், விழுந்த மரங்களை அகற்றி, சூழ்ந்துள்ள நீரினை மோட்டார்கள் மூலம் வெளியேற்றியும் வருகிறோம்” என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.