சிவகாசியில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில், வெற்றி பெற்ற அணிக்கு 15 அடி உயரம் கொண்ட கோப்பையை முன்னாள் அமைச்சர் கே.டி .ராஜேந்திரபாலாஜி பரிசாக வழங்கி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மினி விளையாட்டு அரங்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக மாநில அளவிலான கபடி போட்டி 2 நாட்கள் நடைபெற்ற போட்டியில் 90 அணிகள் பங்கேற்றன.
பின்னர் இதன் இறுதி போட்டியை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலளாரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க கமிட்டி துணை தலைவருமான ராஜ் சத்யன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதனையடுத்து விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில் தமிழ்பாடி MKS ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, சிவகாசி சின்ன மருது கிளப் அணியை 7-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
பின்னா் வெற்றி பெற்ற அணிக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க கமிட்டி துணை தலைவர் ராஜ் சத்யன் 15 அடி
உயரம் கொண்ட பரிசு கோப்பையை வழங்கினர்.
இதேபோல் 2ம் இடம் பிடித்த அணிக்கு 12 அடி உயர கோப்பையும், 3ம் இடம் பிடித்த அணிக்கு 10 அடி உயர கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் கோப்பையை பெற்ற அணி வீரர்கள் கோப்பையுடன் நீண்ட நேரமாக குத்தாட்டம் போட்டு மைதானத்தை அலற விட்ட நிகழ்வு காண்போரின் கவனத்தை பொிதும் ஈர்த்தது.
— கா. ரூபி







