அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் அம்பேத்கர், திருவள்ளுவர், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட தலைவர்களை ஒருமையில் இழிவாகவும், அவதூறாகவும் ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசியதாக கூறப்படுகிறது. அவரது பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவரது பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என்று பலரும் சமூக ஊடகங்களில் வலியுறுத்தி வந்தனர். இதனைதொடர்ந்து விசிக கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா.செல்வம் அவதூறாக பேசியதாக மணியன் மீது புகாரளித்தார்.
புகாரின் அடிப்படையில் மணியன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 8 பிரிவுகளின் கீழ் மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் ஆர்.பி.வி.எஸ்.மணியனை சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று அதிகாலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை வரும் 27-ம் தேதிவரை, அதாவது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி, நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இந்நிலையில் தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும், தனது முதுமை மற்றும் உடல்நிலையை கருத்தில் கொள்ளவும், தனக்கு சிறுநீர் தொற்று, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட உபாதைகள் உள்ளதாக ஆர்.பி.வி.எஸ்.மணியன் தெரிவித்தார். மேலும் மணியனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என மணியன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்தார்.