ஆதார் அட்டையில் 123 வயது என அச்சடிக்கப்பட்டதால் அரசின் திட்டங்கள், சலுகைகள், கடனுதவிகள் பெற முடியாமல் 41 வயது பெண் சிரமத்துக்குள்ளாகியுள்ளார்.
திருச்சி தாயனூரைச் சேர்ந்த சீனிவாசனின் மனைவி கவிதா (41). இவரது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மகளிருக்கான கடனுதவி பெற்று ஏதேனும் சுயதொழில் செய்யலாம் என கவிதா முயன்றுள்ளார். ஆனால், ஆதார் அட்டையில் பிறந்த தேதிக்கான ஆண்டு 1982 என்பதற்குப் பதிலாக 1900 என்று தவறுதலாக அச்சடிக்கப்பட்டிருந்ததால், மத்திய மாநில அரசுகளின் எந்தத் திட்டங்களிலும் நிதியுதவி மற்றும் கடனுதவி பெற முடியாது என அரசு அலுவலகங்களில் மறுத்து வந்துள்ளனர்.
ஆதார் அட்டையில் வயதை மாற்றக் கோரி 4 ஆண்டுகளாக கவிதா அலைந்து வந்துள்ளார். ஆனால், மாற்ற முடியவில்லை. இதனால் பல இன்னல்களை தொடர்ந்து சந்தித்து வந்த கவிதா, தனது வயதை மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஆட்சியர் அலுவலகத்துக்கு புகார் மனுவுடன் திங்கள்கிழமை வந்திருந்தார்.
இதையும் படிங்க: பிரிட்டனில் திருமண வயது வரம்பு அதிகரிப்பு!
இவரது மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, வருவாய்த் துறையினர் தாயனூர் கிராமத்தில் உள்ள உதவியாளர் மூலம் கவிதாவை அணுகி சான்றுகளைப் பெற்றுள்ளனர். செவ்வாய்க்கிழமை ஆதார் உதவி மையத்துக்கு வந்து அளிக்கும் தகவலின்படி ஆதாரில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
-ம.பவித்ரா








