சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாத 2,340 நபர்களிடம் இருந்து 11,70,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மட்டுமே 11.70 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் ரூ.1.69 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து, சென்னையில் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும், கூட்டம் அதிகமாகக் கூடும் மார்கெட், திரையரங்கங்கள் உள்ளிட்ட இடங்களில் பலரும் முகக்கவசம் அணியால் இருந்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் முகக்கவசம் அணியாத 2,340 நபர்களுக்கு ரூ.11,70,000/- அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது.#ChennaiCorporation#MaskupChennai #CovidIsNotOver pic.twitter.com/XrsVyVhxlJ— Greater Chennai Corporation (@chennaicorp) July 13, 2022
அதிகபட்சமாக கோடம்பாக்கத்திலும், அதற்கு அடுத்தபடியாக அண்ணாநகரில் 1.26 லட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது. ராயபுரம் பகுதியில் ரூ.1,09,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதனிடையே, தமிழ்நாட்டில் மேலும் 2,269 பேருக்கு புதிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சென்னையில் மட்டும் 729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியோர்கள் மற்றும் கர்ப்பிணிகள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஜூலை 15ம் தேதி முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசம் என்று மத்திய அரசும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








