சென்னையில் இருந்து அந்தமான் சென்ற விமானம், மோசமான வானிலை காரணமாக தரையிறங்காமல் பயணிகளுடன் மீண்டும் சென்னைக்கே திரும்பியது.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானிற்கு விமானம் ஒன்று 184 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. விமானம் அந்தமானை நெருங்கிய போது அங்கு பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மோசமான வானிலை நிலவியது.
இதனால் விமானம் அந்தமானில் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக அங்கு வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தது. ஆனாலும் வானிலை சீரடையாததால் மீண்டும் சென்னைக்கு திரும்பி வரும்படி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து விமானம் தரையிறங்க முடியாததால் சென்னைக்கு திரும்பி வந்தது.
முன்னதாக, பயணிகள் விமானத்துக்குள்ளேயே அமர்ந்திருந்தனர். ஆனால் அந்தமானில் வானிலை சீரடையவில்லை. அந்தமானில் தரைக்காற்று அதிகமாக இருந்ததால் விமானம் ரத்து என விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பயணிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். அந்தமானில் மோசமான வானிலை காரணமாக பயணிகளின் பாதுகாப்புக்கு கருதியே விமானம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பயணிகள் கலைந்து சென்றனர்.








