பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில், அனைத்து தரப்பினரும் சுருக்கமான வரைவு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு அகில இந்திய அளவில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, இதற்காகச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாவாக நிறைவேற்றப்பட்டது.
ஆண்டுக்கு 8 லட்சம் அல்லது அதற்கு குறைவான வருமானம் உள்ளவர்கள், 5 ஏக்கர் விவசாய நிலமும் 1,000 சதுர அடிக்குக் குறைவான வீடு அல்லது பிளாட்டை கொண்டவர்கள் அல்லது நகராட்சி பகுதிகளில் 100/200 சதுர அடி குடியிருப்பு இல்லாதவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் என மத்திய அரசு வரையறை செய்தது.
இது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பிலிருந்தும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இருந்த போதிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் குழப்பங்களும் விவாதங்களும் நீண்டு கொண்டே செல்கின்றன.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தலமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் முறையை ரத்து செய்ய கோரிய விவகாரத்தில் எந்தெந்த விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்பதை சுருக்கமான வரைவாக தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கு செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. செப்டம்பர் 8-ம் தேதியன்று வழக்கின் நிலை குறித்தும் வழக்கு குறித்து ஆலோசிக்கவும் வழக்கு எப்போதெல்லாம் விசாரணை நடத்தப்படும் என்ற தேதிகள் அன்றைய தினம் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– இரா.நம்பிராஜன்








