நியூசிலாந்தில் 4 மாடிகள் கொண்ட விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட விடுதி ஒன்றில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அங்கு ஒரே இரவில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த விடுதியில் 100க்கும் மேற்பட்டோர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தீ விபத்தில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் எனவும், மேலும் 20 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தீ விபத்தில் பலியானோருக்கு பிரதமர் கிறிஸ் ஹாப்கின்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியபபடவில்லை என்று கூறப்படுகிறது. வெலிங்டன் நகர சபையின் செய்தித் தொடர்பாளர் Richard MacLean, பேசுகையில், தீயில் இருந்து தப்பித்து இப்போது அவசரநிலை மையத்தில் உள்ளவர்களுக்கு, விடுதியில் இருந்து தப்பித்த பல முதியவர்கள் உதவி செய்வதாகவும், “என்ன நடந்தது என்பதைப் பற்றி தெரியாமல், நிறைய பேர் குழப்பமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா







