வன்னியர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய 10.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வன்னியர் இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறி தமிழ்நாடு அரசின் அரசாணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர் கவாய் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், வன்னியர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய 10.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இடஒதுக்கீடு என்பது சாதி, சமூக நிலை, பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்றும், ஆனால் வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டில் அதற்கான உரிய தரவுகள் இல்லை எனவம் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மிகவும் பிற்படுத்தபட்டோர் பிரிவில் பல்வேறு வகுப்பினர் இருக்கும்போது, வன்னியர்களுக்கு மட்டும் தனியாக உள் ஒதுக்கீடு வழங்குவது சரியல்ல எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். உள்ஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான சரியான நியாயமான காரணங்களை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும்,
உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரமிருந்தாலும், சரியான காரணங்களை கூற வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இடஒதுக்கீடு என்பது வெறும் சாதி அடிப்படையில் மட்டும் இருக்கக்கூடாது என்றும், அவ்வாறு வழங்கினால் அது அரசியல் சானத்திற்கு எதிரானது எனவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.