மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி அரசு மருத்துவர்கள் 8 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவர் நளினி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், தமிழகத்தில், முதுநிலை அரசு மருத்துவர்களுக்கும், மத்திய அரசு பணியில் உள்ள இளநிலை மருத்துவர்களுக்கும் இடையே 40 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய வித்தியாசம் உள்ளதாகக் கூறியிருந்தனர்.
அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மறு ஆய்வு செய்யும் வகையில் கடந்த 2009ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணை, அரசு மருத்துவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவேண்டும் என்பன உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவானது சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.







