துரித உணவுகள் மற்றும் குளிர்பானங்களால் மக்களுக்கு ஏராளமான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரிப்பதற்கு இது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடைகளில் பொதுவாக குளிர்பானங்களை பில் கட்டும் இடங்களுக்கு அருகில் வைத்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்களை பணம் செலுத்தும் இடங்களுக்கு அருகில் வைத்து விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று விளம்பரம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அந்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் ரெஸ்டாரண்டுகளில் குளிர்பானங்களை இலவசமாக வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உடல் பருமன் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார். தற்போது அதற்கான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இனிப்பு அதிகம் உள்ள குளிர்பானங்களுக்கே அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கொரோனா போன்ற மோசமான நோய்கள் ஏற்படும் சமயத்தில் உடல் பருமன் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. இங்கிலாந்தில் விதிக்கப்பட்டுள்ள இந்த தடை முதல்கட்டமாக சோதனை முயற்சியாக இருக்கும் என்றும், அதன்பிறகு முழுவீச்சில் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.







