சென்னையில் 1,243 வாக்குச் சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர்
சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரேகட்டமாக தேர்தல், பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான தொகுதி பங்கீடு, தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன.
இந்நிலையில், சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்துவது குறித்தும் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சங்கர் ஜிவால், “பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே வாக்குச்சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். சென்னையில் 1,243 வாக்குச் சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது” எனக் கூறினார். சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. சங்கர், சாலை போடும் பணியில் ஈடுபடும் போது மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான வாக்குமூலம் கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.







