பக்தர்களின் வசதிக்காக திருத்தணி முருகன் கோயிலுக்கு விரைவில் ரோப்கார் வசதி ஏற்பாடு செய்து தரப்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு திருத்தணியில் பேட்டியளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் ஒன்பது ஏக்கர் கோயில் நிலங்கள் இந்து சமய அறநிலையத் துறை மூலமாக மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் 500 கோடியை தாண்டும். திருத்தணியில் உள்ள அறுபடை வீடுகளில் ஐந்தாம் வீடான முருகன் கோயிலுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் இருந்தது. இது குறித்து முதலமைச்சரின் உத்தரவின்பேரில் நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம். கோவிலுக்கு புதிய ராஜகோபுரம் கட்டிய பிறகு அந்த ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்ய படிக்கட்டுகள் இன்னும் அமைக்கப்படவில்லை. அப்பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கோயில் அடிவாரத்தில் உள்ள குளம் 9 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. அதனை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. கோயில் அருகே உள்ள இரண்டு குளங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அதனை சீர் அமைக்க உள்ளோம். கோவில் வெள்ளித்தேர், தங்கத்தேர் 2 உள்ளது. இரண்டு தேர்களும் கடந்த 8 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக சீரமைத்து தேரினை ஓட வைக்க இந்து சமய அறநிலை துறை சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியின் போது அறிவித்த முதியவர்கள் பெண்கள் பயன்பெறும் வகையில் திருத்தணி முருகன் கோயிலுக்கு ரோப் கார் வசதி செய்து தரப்படும் என தெரிவித்தார். கோவிலில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அர்ச்சகர்கள் ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்







