நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஒ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய தேர்வு முகமைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல், 16 ம் தேதி வரை காட்டப்பட்ட 594 மதிப்பெண்கள், திடீரென அக்டோபர் 17 ம் தேதி 248 ஆக குறைந்தது எப்படி?, என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மின்னணு முறையிலான இதுபோன்ற விவகாரங்களில் முறைகேடுகள் சாத்தியம் எனும் பட்சத்தில் ,இது மிகப்பெரிய ஆபத்து என்றும், உடனடி விசாரணை தேவை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
மாணவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளை அடிப்படையாக கொண்டு, விரிவாக விசாரணை நடத்தி சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய தேர்வு முகமைக்கு நீதிபதி உத்தரவிட்டார். தற்போதைய நிலையில், மாணவர் முதலில் பெற்றதாக கூறும் 594 மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு, அவரை மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்கும்படி, மருத்துவக் கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.







