விருதுநகர் அருகே உள்ள சத்திரெட்டியாபட்டியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி மட்டுமல்ல யாராக இருந்தாலும் தமிழகத்தில் புதிதாக கட்சி தொடங்கினாலும் காங்கிரஸ் கட்சி அதனை வரவேற்கும். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி விவசாயிகளுடன் இருப்பவர். புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்துள்ளது என அவர் பேசினார்.
மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் பொழுது இந்த புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையாக உள்ளது. விவசாயிகளின் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி களத்தில் இருப்பதால் தான் போராட்டம் வலுப்பெற்று உள்ளது எனவும் புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குரல் கொடுத்தது காங்கிரஸ் கட்சி என பேசிய அவர் ரஜினியின் அரசியல் போக்கு எப்படி இருக்கும் என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை என கூறினார்.
இன்னும் ரஜினிகாந்தின் அரசியல் நிலை எடுக்கவில்லை. மாற்றம் வரும் மாற்றம் வரும் என்று மட்டுமே அவர் கூறுவது மிகவும் வித்தியாசமாக உள்ளது. அவர் கட்சி தொடங்கியதும் அவர் கொள்கை என்ன திட்டம் என்ன என தெளிவாகக் கூறிய பின் அதை பற்றி விமர்சிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.







