தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்களுக்கு இதுவரை எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கின. கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வந்த மாணவர்கள், உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். யாருக்கும் இதுவரை எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என கூறிய ராதாகிருஷ்ணன், தடுப்பூசி போடும் பணியில் சுணக்கம் ஏற்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.







