புனேவில் வசிக்கும் இளைஞர் ஒருவர் டீ ஸ்டார்டப் நிறுவனம் மூலம் மாதத்திற்கு ரூ.2 லட்சம் சம்பாதிப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
28 வயதான அபிமன்யு என்ற இளைஞர் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அதன்பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு 12,000 ரூபாய் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் அந்த வேலையும் பறிபோயுள்ளது. இதனையடுத்து டீ கடை ஒன்றை திறந்துள்ளார். ஆனால் ஊரடங்கு காரணமாக அந்த வருமானத்திற்கும் வழி இல்லாமல் போனது.
என்ன செய்வதென தெரியாமல் திகைத்த அவர், அதன்பிறகு ஒரு சாதுர்யமான முடிவை எடுத்துள்ளார். அலுலவகங்கள் திறந்த பிறகு, கொரோனா அச்சம் காரணமாக ஊழியர்கள் கடைக்கு செல்வதற்கு அச்சப்பட்டனர். அதனால் அபிமன்யு ஒவ்வொரு அலுவலகமாக சென்று அவர்களுக்கு டீ வழங்கி வந்துள்ளார். சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் கப்களுக்கு பதிலாக பேப்பர் கப்களை பயன்படுத்த தொடங்கியுள்ளார். தொடக்கத்தில் அனைவருக்கும் இலவசமாக டீ வழங்கி வந்துள்ளார்.
அவர் வழங்கும் டீ சுவை பிடித்து அவருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்து விட்டனர். ஏராளமானோர் ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுக்க தொடங்கினர். இதனையடுத்து அவர் கட்டணம் நிர்ணயித்து டீ விற்பனை செய்துள்ளார். தற்போது நாளொன்றுக்கு 700 கப் டீ விற்பனை செய்து, மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார். குறைந்தது ரூ.50,000 வருமானம் வந்துவிடும் என அபிமன்பு தெரிவித்துள்ளார். தற்போது அபிமன்யு ஐந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளார். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமானதால் ஆன்லைன் ஆர்டர் மூலம் டீ விற்பனை செய்வதற்கு இளைஞர்களை பணியமர்த்தியதாக கூறியுள்ளார்.







