சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழப்பு
வழக்கு தொடர்பாக 250 பக்க அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லி அடுத்த தனியார் ஓட்டலில் கடந்த 9ஆம் தேதி நடிகை சித்ரா தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சித்ரா மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சித்ரா திருமணமானவர் என்பதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 14ஆம் தேதி சித்ராவின் தாயார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற்றது.
15ஆம் தேதி சித்ராவின் கணவர் ஹேம்நாத், அவரது தந்தை மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த 17ஆம் தேதி ஹேம்நாத்திடம் 8 மணி நேரமாக விசாரணை நடந்தது. இதனையடுத்து, சித்ராவின் தோழி மற்றும் சித்ராவின் உதவியாளர் ஆனந்திடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ சுமார் 250 பக்க அளவில் விசாரணை அறிக்கையை தயார் செய்துள்ளார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் விசாரணை அறிக்கையை காவல்துறை வசம் ஒப்படைப்பார் என தெரிகிறது. மேலும், நடிகை சித்ரா உயிரிழப்புக்கு, வரதட்சணை காரணமல்ல எனவும் ஆர்டிஓ வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.







