சென்னை பெருநகர காவல்துறையினரின் மூன்றாவது கண் எனும் சிசிடிவி கேமரா திட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் உலக நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட 138 நகரங்களில் சிசிடிவி தொடர்பான ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. அதில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் கொண்ட நகரங்களில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் உலகத்திலேயே அதிக சிசிடிவி கேமராக்களை கொண்ட நகரமாக சீனாவின் பீஜிங் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அங்கு சுமார் 10 லட்சம் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும், ஒரு சதுர கிலோமீட்டருக்கு 278 கேமராக்கள் மட்டுமே உள்ளன.
6.6 லட்சம் சிசிடிவி கேமராக்கள் கொண்ட லண்டன் நகரில் சதுர கிலோமீட்டருக்கு 399 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இந்தியாவை பொறுத்தவரையில் சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் காணப்படுகின்றன. 2 லட்சத்து 80 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் கொண்ட சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சதுர கிலோமீட்டருக்கு 657 கேமராக்கள் உள்ளன.
இந்த கணக்கெடுப்பு விவரங்களால் சென்னை பெருகர காவல்துறைக்கு கூடுதல் பெருமை கிடைத்துள்ளது. அதோடு சிசிடிவி கேமராக்கள் அமைப்பதால் குற்றங்களும் குறைந்து வருவதாக கணக்கீட்டின் மூலம் அறிய முடிகிறது.







