சட்டவிரோதமாக நடத்திய பார்; லஞ்சம் வாங்கிய காவலர்

சென்னையில் சட்டவிரோதமாக பார் நடத்தும் உரிமையாளரிடம், தலைமை காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில்…

சென்னையில் சட்டவிரோதமாக பார் நடத்தும் உரிமையாளரிடம், தலைமை காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் சேகர் என்பவர் மதுபான பார் நடத்தி வருகிறார். அந்த கடைக்கு சீருடையில் வந்த காவலர் ஒருவர் இந்த பகுதியில் வேறு எங்கும் மதுபான பார்கள் நடைபெறவில்லை எனவும் உங்களது பார் மட்டுமே இயங்குகிறது என பேசத்தொடங்குகிறார். பின்னர் இவற்றை கண்டுகொள்ளாமல் இருக்க இனி ரோந்து வாகனத்தில் வரும் போலீசார், காவல் ஆய்வாளர் மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட தனக்கும் வாரம் தோறும் பணம் தரவேண்டும் என கூறி பார் உரிமையாளரிடம் இருந்து பணம் பெறுகிறார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  மேலும், அந்த வீடியோவில் காவலர் அருகே இருந்த மதுபான கடைக்கு சென்று மதுபானம் வாங்கி அங்கிருந்த இளைஞர் ஒருவரிடம் கொடுத்து போலீஸ் ரோந்து வாகனத்தில் வைக்கச் சொல்லும் காட்சியும் அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகியிருந்தது.

மதுபோதையில் பல்வேறு குற்றச் செயல்களும் கொலைகளும் நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட கூடிய காவலர் ஒருவர் சட்ட விரோதமாக இயங்கும் பாரை மூட சொல்லாமல் கையூட்டு பெற்று கொண்டு கடையில் இருந்து மதுபானத்தை வாங்கி போலீஸ் வாகனத்தில் வைக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக எழும்பூரில் உளவு பிரிவு காவலர் ஒருவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யும் நபரிடம் லஞ்சம் வாங்கிய நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.