20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பல பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் படித்து முடித்து பல ஆண்டுகளாக பட்டம் பெறாமல் இருக்கும் மாணவர்களுக்காக சிறப்புத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அந்தவகையில், அதன்படி, கடந்த 2019, 2020 ல் சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், 2002-2003ம் ஆண்டு முதல், தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2002-2003ம் ஆண்டு முதல், தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், இன்று முதல், https://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் வழக்கமான தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை, தேர்வு முறை, தேர்வு மையம் தொடர்பான விவரங்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.







