கொல்கத்தாவுக்கு 153 ரன்களை வெற்றி இலக்காக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.
இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டியின் ஐந்தாவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரிட்சையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியில் ரோகித் ஷர்மா மற்றும் டி காக் தொடக்க வீரர்களக களமிறங்கினர். இதில் டி காக் இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இதையடுத்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ், கேப்டன் ரோகித்துடன் கூட்டணி அமைத்து அணியின் ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து களமிறங்கிய மும்பை வீரர்கள் சீரான இடைவெளியுடன் தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
கொல்கத்தா அணியில் ரசல் தனது பந்து வீச்சின் மூலம் மாயஜாலம் காட்டினார். அவர் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.







