இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி செலுத்த 20 ஆயிரம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் ஜனவரி மாதத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கலாம் என தெரிவித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், முன்களப்பணியாளர்கள், முதியோர்கள் உள்பட 30 கோடி பேருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும் என கூறினார்.
அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள தடுப்பூசி மருந்துகளை பரிசீலனை செய்து வருவதாகவும், தடுப்பூசி போடுவதற்கு தயங்கும் நபர்களுக்கு மருந்தின் பாதுகாப்புத் தன்மை குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதேநேரத்தில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.







