புதுவையில் கொரோனா தொற்றுக்கு எதிரனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதார் கட்டாயமில்லை என புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக தடுப்பூசி திருவிழா புதுச்சேரியில் நேற்று தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்காக 100 மையங்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 100 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாவும், 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும் புதுச்சேரி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறும் முகாம்களில் நேற்று துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை செளந்தரராஜன், இரு சக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் மற்றும் வெளியே செல்லும் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால், அபராதம் விதிப்பது மட்டுமல்லாமல் அவர்ககளுக்கு முகக்கவசமும் வழங்கி வருவதாக கூறினார். பொது விழாக்களில் பங்கேற்கும் மக்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தடுப்பூசியை பொறுத்த அளவில், ஆதார் அட்டை இல்லை என்றாலும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்து அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து வரும் காலங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழிசை சௌந்தரராஜன் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







