சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை குப்பை தொட்டியிலிருந்து பொதுமக்கள் மீட்டனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள எம்செட்டிபட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை குடியிருப்பு பகுதியில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்செட்டிபட்டி பகுதியில் இன்று காலை பச்சிளம் குழந்தை ஒன்று துணிகள் சுற்றப்பட்ட நிலையில் குப்பை தொட்டியில் இருந்துள்ளது. அப்பொழுது நாய் குரைக்கும் சத்தம் மற்றும் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கிருந்தவர்கள் வந்து பார்த்துள்ளனர். அப்போது குப்பைத் தொட்டிக்குள் குழந்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த குழந்தை மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தொளசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முட்புதரில் வீசி செல்லாமல் குடியிருப்பு பகுதியில் வீசப்பட்டதால் பச்சிளம் ஆண் குழந்தை பொதுமக்களால் உரிய நேரத்தில் காப்பாற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







