காவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஊதிய உயர்வு வழங்கவும் கோரி தொடரப்பட்ட வழக்கில், நாளை பிற்பகலுக்குள் பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கை கரூரைச் சேர்ந்த மாசிலாமணி என்ற காவலர் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு காவல் துறையினருக்கு வழங்கப்படும் ஊதிய விகிதம் குறித்தும், பிற மாநிலங்களில் காவல் துறையினருக்கு வழங்கப்படும் ஊதிய விகிதம் குறித்தும் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர். இதற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாத நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாளை பிற்பகலுக்குள்ளாக பதில்மனு தாக்கல் செய்யாவிட்டால், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் காணொலியில் ஆஜராக நேரிடும் என எச்சரித்தனர். மற்ற துறையை சார்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தி தங்களது பிரச்னைக்கு தீர்வு காண்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா? என்றும் கேள்வி எழுப்பினர்.







