பிரிந்து வாழும் மனைவியை தம் வீட்டுக்கு அனுப்பக்கோரி நெல்லை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வைரவிகுலம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர், தச்சநல்லூரைச் சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 6 ஆம் தேதி அந்தப் பெண்ணின் வீட்டில் வைத்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவரது மனைவி ஆனந்தராஜின் வீட்டிற்கு வர சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இளைஞர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை கல்லிடைகுறிச்சி பழைய காவல் நிலையம் பின்புறம் உள்ள செல்போன் டவரில் ஏறி தமது காதல் மனைவியை சேர்த்து வைக்க கோரிக்கை விடுத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்த இளைஞரிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி அவரை செல்போன் டவரில் இருந்து இறங்க வைத்தனர்.







